13.7.08

மலாயா பல்கலைக்கழகத்தில் மகராஜி

மலேசிய ஐ நா அறவாரியத்தில் மகராஜி

பயணம்

கருணையெனும் விதை

அமைதி பெறுவது சாத்தியமானது

ஒரு பயணம்

ஒவ்வொரு நாளும் ஆனந்தத்தில் இருத்தல்

நம்முள்ளே மேற்கொள்ளப்படும் பயணம்

புரிந்துணர்வூ என்னும் அன்பளிப்பு

நம்முள்ளேயிருக்கும் சுதந்திரம்

28.5.07

மனிதனின் அடிப்படையான தேவை

மகராஜி தனது சிறு பிராயத்திலிருந்தே அமைதிக்கான செய்தியைப் பற்றி மக்களிடம் உரையாற்றி வருவதுடன், தனது 13-வது வயதிலேயே உலகைச்சுற்றிப் பிரயாணம் செய்யத் தொடங்கினார். அன்றிலிருந்து அவர் கடந்த நாற்பது வருடங்களாக உலகைச் சுற்றியுள்ள சுமார் ஆரறைகோடிக்கும் மேற்பட்ட மக்களிடம் உரையாற்றி உள்ளார். அவருடைய உரைகளை மலேசியா உட்பட 88 ற்கும் மேற்பட்ட நாடுகளில் பல்வேறு சாதனங்களின் வாயிலாகப் பெற்றுக்கொள்ளலாம்.

உள் அமைதியை பற்றி அவர் உரையாற்றி வந்தாலும் இயற்கையினால் ஏற்படும் பேரழிவுகளினால் வேதனைப்படும் மக்களின் அடிப்படை தேவைகளை அவர் உணராமல் இல்லை. பிரேம் ராவத் ஸ்தாபனம், மகராஜியின் செய்தியை உலக முழுவதும் பரப்புவதை முன்னிட்டு பலமொழிகளில் சாதனங்களை வெளியீடு செய்துவருவதோடு மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும் முன்னனி வகிக்கின்றது.

உதாரணத்திற்கு 2005ஆம் ஆண்டு பிரேம் ராவத் ஸ்தாபனம் உலகிலேயே மிகப் பெரிய மனிதாபிமான நிறுவனமான ஐக்கிய நாட்டின் உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து நைகர், இந்தோனிசியா, கௌதமாலா, இலங்கை, போன்ற நாடுகளில் பட்டினியால் வாடியவர்களுக்கு உணவு வழங்கியுள்ளது. அத்துடன் பாகிஸ்தானில் நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஐக்கிய அமெரிக்காவில் கத்தரினா சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்; சூனாமி பேரிடரால் பாதிக்கப்பட்டோருக்கும் நிதி உதவி வழங்கியது.

பிரேம் ராவத் ஸ்தாபனம் உங்களின் உள் அமைதியைப் பற்றிய செய்தியைப் பரப்புகின்றதா அல்லது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்கிறதா?

என் செய்தி புதுமையானதோ பழமையானதோ அல்ல. இது காலவரம்பற்றது. மக்கள் தேடும் அமைதியும் மனநிறைவும் அவர்கள் உள்ளேயே இருக்கிறது. இது வெரும் சொற்கள் மட்டுமல்ல. நான் மக்களுக்கு ஞானவழிமுறையை வழங்குகிறேன். ஞானவழிமுறை என்பது ஏற்கனவே அவர்கள் உள்ளிருக்கும் அமைதியை உணர்வதற்கான ஒரு செயல்முறை வழியாகும். நான் மக்களுக்கு இந்த சாத்தியத்தை வழங்க விரும்புகிறேன். அவர்கள் இதை தொடர விரும்பினால் என்னால் முடிந்த உதவியை செய்ய விரும்புகிறேன். பிரேம் ராவத் ஸ்தாபனம் இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.
தங்கள் வாழ்வில் உள் அமைதியை அனுபவித்து இன்புற வேண்டுமென விரும்பும் அனைவருக்கும் இச்செய்தி சென்றடைய பிரேம் ராவத் ஸ்தாபனம் பெரும் ஆதரவை வழங்கி வருகிறது.

அதோடு அண்மைய காலத்தில் ஐக்கிய அமெரிக்காவில் பயங்கரமான பேரழிவு ஒன்று ஏற்பட்டது. இந்தக் காலகட்டத்தில் இவ்வாறான பேரிடர்களைப் பற்றிய விவரங்களை சுலபமாக நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.. பிரேம் ராவத் ஸ்தாபனத்துடன் நான் தொலைபேசியின் வாயிலாக தொடர்புகொண்டு நம்மால் இயன்ற உதவிகளை வழங்குமாறு கூறினேன்.


உணவு மற்றும் தண்ணீருக்கான தேவையைப்போன்று, அமைதியை உணர வேண்டும் என்ற தேவையும் அடிப்படையான ஒன்று என நீங்கள் கூறுகிறீர்களா?

அமைதியை உணர வேண்டும் என்ற தேவை எல்லாத் தடைகளையும் கடந்து செல்கிறது. சிறையில் இருப்பவனுக்கும் இந்த தேவை உள்ளது. பெரிய மாளிகையில் வாழ்பவனுக்கும் பட்டினியால் வாடுபவர்களுக்கும் அமைதியை உணர வேண்டும் என்ற தேவையுள்ளது. ஏனெனில் அவர்கள் உணவை உண்டபின்பும் அமைதியை அனுபவிப்பதற்கான தேவை தொடர்ந்து அவர்கள் உள்ளேயே இருக்கும்.

நீங்கள் எனக்காக அமைதியை உணருங்கள் என்று ஒருவராலும் கூறமுடியாது. அது எப்படி இருக்குமென்றால் நீங்கள் “எனக்காக நீர் அருந்துங்கள், எனக்காக உணவை உட்கொள்ளுங்கள், எனக்காக உறங்குங்கள்,” என்று சொல்வதைப் போன்று இருக்கும். ஆகவே அமைதியை உணர்வது நமது ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேவையாகும்.

நீங்கள் கூறுவது எந்த அளவுக்கு முக்கியமானது?

நாம் உயிரோடு இருக்கிறோம். ஆனால் உயிருடன் இருப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் உணர்வதில்லை. எப்பொழுது உங்களிடம் ஒரு பொருள் அதிகளவில் உள்ளதோ நீங்கள் அதன் மதிப்பை உணர்வதில்லை. அது உங்களிடம் இருந்து எடுக்கப்படும் பொழுது திடீரென உங்களுக்கு ஞானோதயம் பிறக்கும். இந்த உயிர் எவ்வளவு பெறுமதிப்பு வாய்ந்தது. ஒவ்வொரு நாளும் நிறைவுடன் வாழ்வது எவ்வளவு முக்கியமானது, நமது வாழ்வில் அமைதியை உணர்வதும் அடிப்படை தேவைகளை அடையாளம் கண்டுகொள்வதும் எவ்வளவு முக்கியமானது.

நான் இங்கே எதையும் விற்பனை செய்யவில்லை. நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கும் ஒன்றை உங்களுக்கு ஞாபகப்படுத்தவே இங்கு வந்துள்ளேன். உங்கள் வாழ்வில் அமைதி வேண்டுமென்றால் உங்களிடமிருந்தே ஏன் அதை தேடத் தொடங்கக் கூடாது? உங்கள் உள்ளம் உங்களிடம் கூற விரும்புவதை ஏன் புரிந்துகொள்ளக் கூடாது? உங்கள் வாழ்வில் அமைதியை உணர்ந்து நிறைவுடன் வாழ்வதற்கு எது தேவையோ அதை செய்யுங்கள். அமைதியைத் தேடி அதை கண்டு கொள்ளுங்கள். அதை அனுபவியுங்கள். உங்களால் இயலாவிட்டால் என்னால் உங்களுக்கு உதவ முடியும்.

தரை இறக்கல்: PDF

உள்ளிருக்கும் உலகத்தை கண்டுகொள்ளுங்கள்



“உண்மையான ஆனந்தம் சாதனைகளைப் பற்றியதல்ல, உங்கள் உள்ளேயே அமைதியைக் கண்டுகொள்வதைப் பற்றியது. கண்டுகொள்வதற்காக உள்நோக்கிச் செல்லும் இந்தப் பயணம்தான் எல்லா பயணங்களையும் விட மிக சிறந்த பயணம்.”
மகராஜி

மகராஜி அவர்கள் தன் சிறுபிராயத்திலிருந்தே மக்களிடம் உள் அமைதியைப் பற்றி உரையாற்றி வருவதுடன் தனது பதிமூன்றாவது வயதில் அவர் சர்வதேச ரீதியில் பிரயாணம் செய்ய தொடங்கினார். அன்றுதொட்டு அவர் உலகெங்குமுள்ள ஆறரைகோடிக்கும் மேற்பட்ட மக்களிடம் உரையாற்றியுள்ளார். அவரின் உரைகளை பல்வேறு சாதனங்களின் வாயிலாக மலேசியா உட்பட 88-ற்கும் மேற்பட்ட நாடுகளில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.


புதிய கண்டங்களைக் கண்டுபிடிப்பதற்கு, கண்டுபிடிப்பாளர்கள் எப்பொழுதும் விண்வெளியை நோக்கியும், சமுத்திரத்தின் அடித்தளத்தை நோக்கியும் செல்கின்றனர். இந்த ஆராய்ச்சிப் பிரயாணங்களில் பங்குபெற முடியாத பலர் கண்டுபிடிப்பதனால் ஏற்படும் கிளர்ச்சியை புத்தகங்களில் இருந்தும், சஞ்சிகைகளில் இருந்தும், மற்றும் தொலைக்காட்சியில் இருந்தும் பெற்றுகொள்ள விரும்புகின்றனர். இன்னும் சிலரோ
சந்திரனுக்குப் போவதைப் பற்றியும் சமுத்திரத்தின் அடித்தளத்திற்கு போவதைப் பற்றியும் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். புதிய கண்டுபிடிப்புகளை கண்டுகொள்வதற்கான உண்மையான தேவை எப்பொழுதும் மக்களிடம் இருப்பதை இதிலிருந்து நம்மால் அறிய முடிகிறது.

எந்த ஒரு மனிதனும், எந்த ஒரு சூழ்நிலையில் இருந்தாலும் பயனடையக்கூடிய ஒரு கண்டுபிடிப்பைப் பற்றி மகராஜி அவர்கள் உலகெங்கும் சென்று உரையாற்றி வருகின்றார். அவர் ஒவ்வொரு மனிதனின் உள்ளேயும் கண்டுகொள்ளப்படாத ஒரு இடத்தைப் பற்றியும், அங்கே கண்டு கொள்ளப்படுவதற்காகக் காத்திருக்கும் அமைதியைப் பற்றியும் உரையாற்றுகின்றார். மகராஜி தங்கள் உள்ளே அந்த நிரந்தரமான அமைதியை உணர விரும்புகிறவர்களுக்கு செயல்முறையான ஒரு வழியை காண்பித்துகொடுக்கிறார்.

“அமைதி ஒரு புத்தகத்திலோ, ஒரு இடத்திலோ, ஒரு மலை உச்சியிலோ இல்லை, ஆனால் அது ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் குடிகொண்டிருக்கிறது. அதை கண்டுகொள்ள வேண்டும். மனிதர்கள் என்ற ரீதியில் நமது பிரதான கனவு என்னவாக இருக்கவேண்டும்? நமக்குள்ளே உள்ள அந்த அமைதியை கண்டுகொண்டு அதை அனுபவிக்க வேண்டும் என்பதேயாகும்,” என மகராஜி கூறுகின்றார்.

இந்த வாழ்வு கண்டுகொள்வதைப் பற்றியது. உங்கள் உயிரைக் கண்டுகொள்வதைப் பற்றியது. உண்மையான ஆனந்தத்தை கண்டுகொள்வதைப் பற்றியது. இதை புரிந்து கொள்வதற்கும், உங்களை நிறைவு செய்து கொள்வதற்கும் உங்களுக்கு தரப்பட்டிருக்கும் சந்தர்ப்பமானதுதான் இந்த வாழ்வாகும்.

மக்கள் கேட்ட சில கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்திருக்கிறார்.

கேள்வி: என்னைச் சுற்றியுள்ள உலகை ஆராய்வதை நான் மிகவும் விரும்புகின்றேன். வெளியே மிகவும் அழகான விஷயங்கள் இருக்கும்பொழுது நான் எதற்காக என்னுள்ளே கவனத்தை செலுத்த வேண்டும்?

பதில்: மக்கள் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து “அது மிகவும் அழகாக உள்ளது” எனக் கூறுவது இயற்கை. நான் கூறுவது என்னவென்றால் சூரிய அஸ்தமனத்தை விட, சந்திரோதயத்தை விட மற்றும் எல்லா மலைகளையும் விட உங்களால் ஒரு போதும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மிகவும் அழகான ஒரு பொருள் உங்கள் உள்ளே உள்ளது என்றுதான். அதுதான் இந்த வாழ்வு.

இந்த வாழ்வின் கதை உங்களிடமிருந்து ஆரம்பித்து, உங்களுடனேயே முடிவடையும். நீங்கள் செல்லும் இப்பாதையில் வேறு எவரும் வரப் போவதில்லை. இந்தப் பயணத்தில் நீங்கள் தான் ஒரே பிரயாணி. இதன் ஆனந்தத்தையும் அழகையும் நீங்கள் மட்டுமே அனுபவிக்க முடியும்.

கேள்வி: எனக்குள்ளே கவனத்தை செலுத்தும் பிரயாணம் அழகானது என நீங்கள் விளக்குகின்றீர்கள். நான் கற்பனை செய்ததோ அமைதியை உணர்வது ஒரு விதத்தில் மனசலிப்பை ஏற்படுத்தும், ஆனந்தத்தை அளிக்காது என்றுதான். நான் எப்பொழுதும் குதூகலமாக இருக்கவே விரும்புகிறேன்.

பதில்: உங்களுக்கு குதூகலமாக இருக்கவா விருப்பம்? டிஸ்கோ தாளத்திற்கு நீங்கள் நடனமாட விரும்புகின்றீர்களா? டிஸ்கோவானது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முடிவடைந்துவிடும். ஒருபோதும் முடிவடையாத, இரவும் பகலும், ஒரு நாளில் இருபத்து நான்கு மணி நேரமும், ஒரு வாரத்தில் ஏழு நாட்களும், ஒரு வருடத்தில் முன்னூற்று அறுபத்து ஐந்து நாட்களும் அரங்கேறிக்கொண்டிருக்கும் டிஸ்கோ ஒன்று உங்களுக்குள்ளே உள்ளது. ஒவ்வொரு பருவ காலத்திலும் அது அங்கே இருக்கிறது. மழைபெய்யும் போதும், இடி இடிக்கும்போதும், மின்னல் மின்னும் போதும், வெள்ளப் பெருக்கின்போதும், அல்லது நில நடுக்கத்தின் போதும் அந்த இசையானது இசைப்பதை நிறுத்துவதில்லை. உங்களுக்கு உண்மையான குதூகலம் தேவையாயின் உங்கள் உள்ளத்துடன் நடனமாடத் தொடங்குங்கள். அதுதான் உண்மையான குதூகலம்.


கேள்வி: “உங்களையே நீங்கள் அறிந்துகொள்வது சாத்தியம்” என்று கூறும்போது நீங்கள் எதை குறிப்பிட்டு கூறுகிறீர்கள்?

பதில்: நான் தய்வானில் இருந்தபோது ஒரு புத்தகத்தை படித்தேன். அதில் “உங்கள் நண்பர்களைப் புரிந்துகொள்வது மிகவும் புத்திசாலித்தனமாகும், ஆனால், உங்களையே அறிந்துகொள்வது விவேகமாகும்,” என எழுதப்பட்டிருந்தது.

உண்மையிலேயே நீங்கள் நினைப்பதைவிட மேலும் ஒன்று உங்கள் உள்ளே இருக்கிறது. இன்னமும் திறக்கப்படாத ஒரு பக்கம் உங்கள் உள்ளத்தின் உள்ளே இருக்கலாம், இன்னும் கண்டுபிடிக்கப்படாத சுரங்கம் ஒன்று அங்கே இருக்கலாம். இந்த மாளிகையில் நீங்கள் பார்க்காத இன்னுமொரு அறை அங்கே இருக்கலாம்,

எனவே, உங்களையே நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால், இந்த உயிர் வாழ்வை கண்டு கொள்வதிலிருந்துதான் அது ஆரம்பிக்கவேண்டும், உங்கள் உள்ளத்தை கண்டுகொள்வதிலிருந்துதான் அது ஆரம்பிக்கவேண்டும். அனைத்தையும் அறிந்துகொண்டால் மட்டுமே ஞானம் கிடைக்குமென மக்கள் எண்ணுகிறார்கள். அது தவறான எண்ணமாகும். உங்களையே நீங்கள் அறிந்துகொள்வதே ஞானமாகும். அதுதான் மெய்ஞானம் என்பதாகும்.

தரை இறக்கல்: PDF

சுவாசத்தின் மகத்துவம்

நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள். உங்கள் உள்ளே பேரானந்தத்தை உணரக்கூடிய சாத்தியம் இருக்கிறது. இந்த மூச்சு உங்களுள் வந்துபோவதால் நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். அது எவ்வளவு விலைமதிக்கத்தக்கது? எவ்வளவு முக்கியம் வாய்ந்ததாக இருக்கிறது? அது எவ்வளவு அற்புதமானது?

எந்தவொரு முயற்சியுமின்றி நாம் சுவாசிப்பதால் அதன் மதிப்பையும் உயிரோடு இருப்பது எவ்வளவு அற்புதமானது என்பதையும் நாம் மறந்து விட்டோம். இந்த மூச்சு நம்முள்ளே வந்துபோய் கொண்டிருந்தபோதும் இப்படி ஒரு பொக்கிஷம் நம்முள்ளே இருப்பதை நாம் அறிந்ததேயில்லை. வாழ்நாள் முழுவதும் அதன் மகத்துவத்தை கண்டுகொள்ளாமலேயே இறந்துவிடுகிறோம்.

இவ்வுலகில் நம்மிடம் உள்ள சொத்துகள் எல்லாம் பெருமதிப்பு வாய்ந்த பொக்கிஷம் என நாம் கருதிவிட முடியாது என்பதை பலரும் ஒப்புகொள்வீர்கள். பொக்கிஷமாக கருதும் சிலவற்றை வங்கியில் சேமித்து வைக்கமுடியாது. அன்பு, ஆரோக்கியம் மற்றும் குடும்பம் போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவை. நிச்சயமாக அந்த பட்டியலில் மூச்சு மிகவும் விலைமதிக்க முடியாத ஒன்று. உண்மையாகச் சொல்லப்போனால் இந்த மூச்சு இல்லாமல் நாமா?

மகராஜி கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக அடிப்படையான ஒரு பொக்கிஷம் நம்மிடம் இருப்பதை பற்றி உரையாற்றி வருகிறார். நமக்கு கிடைத்திருக்கும் இந்த உயிர்தான் விலைமதிக்க முடியாத சொத்து என எடுத்துரைக்கிறார்.

“நாம் உயிரோடிருப்பதால் நமக்கு கிடைத்திருக்கும் பாக்கியத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த வாழ்வு நல்லவை கெட்டவை என்பதைப் பற்றியதல்ல. இது உயிரெனும் பாக்கியத்தைப் பெற்றிருப்பதைப் பற்றியது.”

“இந்த சுவாசம்தான் மாபெரும் அதிசயம். வந்து போகும் இந்த சுவாசம் நம்முடைய நல்லவை கெட்டவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. இது அனைத்தையும் கடந்து செல்கிறது. நமக்கு உயிர் எனும் சக்தியைக் கொடுக்கிறது. அது நம்முள் வந்து நம்மைத் தொடுவதால்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உயிரோடு இருப்பதனால் இவ்வுலகில் மற்ற எல்லா விஷயங்களும் இருக்கின்றன,” எனக் கூறுகிறார்.

இந்தியாவில் பிறந்து வளர்ந்த மகராஜி அவர்கள் தனது 13-வது வயதிலேயே உலக முழுவதும் பிராயணம் செய்யத் தொடங்கினார். 20 பேர் கொண்ட சிறு கூட்டமாயினும் லட்சக்கணக்கான மக்கள் கூட்டமாயினும் அனைத்து கண்டங்களிலும் உரையாற்றி வருகிறார். அதில் அரசாங்க பிரமுகர்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள் மற்றும் பாமர மக்களாக இருப்பினும் எப்பொழுதும் அவரின் செய்தியின் கருப்பொருள் ஒன்றேதான். ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொண்டு உரையாற்றுகிறார்.

“இந்த சுவாசத்தின் மகத்துவத்தை உங்களுக்கு நினைவுப்படுத்துகிறேன்,” என்கிறார்.

உயிரோடு இருப்பதன் அதிசயத்தைப் பற்றி எடுத்துரைப்பதோடு அல்லாமல் ஞானவழிமுறை எனும் அன்பளிப்பின் வழி நாம் யார் என்பதை அறிவதற்கான முறையை காண்பித்து கொடுக்கிறார்.

ஞானவழிமுறை கொண்டு வரும் அனுபவம் புதிதான ஒன்றல்ல. அது ஏற்கனவே நம்மிடம் உள்ளது. ஆனால் நாம் மறந்துவிட்டோம் என தெளிவுப்படுத்துகிறார். கவனிக்கப்படாமல் இருக்கும் நம்முடைய அந்தவொரு அம்சத்தை கண்டுகொள்ளுமாறு மக்களுக்கு ஊக்கமளிக்கிறார்.

அதிசயம் என்பதை இந்த உலகம் எவ்வாறு புரிந்துக்கொண்டுள்ளது? எதை நாம் அதிசயம் என்கிறோம்? எதை நாம் மறந்துவிட்டோம்? எது உண்மையிலேயே அதிசயம்?

இந்த மூச்சு உங்களுள் வந்துபோவதுதான் மாபெரும் அதிசயமாகும். இந்த அதிசயம்தான் இரவும் பகலும் உங்களுள் தானாகவே இயங்கிகொண்டிருக்கிறது. ஆனால் நம்மால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை. நமது அன்றாட அலுவல்களிலும் காரியங்களிலும் மற்றும் உரையாடல்களிலும் இதை முற்றிலும் மறந்து விடுகிறோம். உங்களின் இறுதி மூச்சை எடுப்பதற்காக போராடும் பொழுதுதான் உண்மையான அதிசயம் எது என்பதை புரிந்துகொள்வீர்கள்.

சீராக வந்து போய்கொண்டிருக்கின்ற இந்த மூச்சினால்தான் உங்களால் அனைத்தையும் செயலாற்ற முடிகிறது என்பதை நீங்கள் நிச்சயமாக கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த மூச்சு சீராக இல்லாவிட்டால் மற்ற அனைத்தும் சீர்குலைந்துபோய்விடும். ஒவ்வொரு மூச்சிலும் ஓர் இசைமீட்டப்படுகிறது. அந்த சாத்தியத்தை உணர விழிப்புணர்வோடு இருங்கள்.

இவ்வுலகில் மற்ற எல்லாவற்றுக்கும் நீங்கள் ஏதாவது பிரதியுபகாரம் செய்ய வேண்டியுள்ளது. அது உங்கள் முயற்சியாகவோ பணமாகவோ அல்லது உங்கள் நேரமாகவோ இருக்கலாம். மற்றவையெல்லாம் உங்களுக்கு செலவை உருவாக்கக்கூடியவை. ஆனால் இந்த மூச்சு வருகிறது. உங்களுக்கு தொடர்ந்து கொண்டு வருகிறது. அது எதைக் கொண்டு வருகிறது? அது ஆனந்தத்தைக் கொண்டு வருகிறது. உங்களுக்கு அழகைக் கொண்டு வருகிறது. உங்கள் வாழ்வில் அருளைக் கொண்டுவருகிறது. பெரும் பொக்கிஷமான சக்திவாய்ந்த இந்த உயிரைக் கொண்டு வருகிறது.

தரை இறக்கல்: PDF

ஆனந்தத் தருணம்

வாழ்க்கையில் எம்மாதிரியான சவால் முழுமையான நிறைவை தரவல்லது? இமய மலையை ஏறுவதா, பிரான்ஸ் நாட்டு நெடுதூர சைக்கிள் பந்தயத்தில் வெற்றி பெறுவதா, நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பத்து வினாடிகளில் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் ஓடி முடிப்பதா? அல்லது இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்தையும் இன்பமாக அனுபவிப்பதா?

மகராஜியை பொருத்தவரையில், ஒவ்வொரு தருணத்தையும் இன்பமாக அனுபவிப்பதுதான் உள்ளத்தில் நிலையான நிறைவை அளிக்கிறது. எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய நிரந்திரமற்ற திருப்திக்காக காத்திருப்பதைப் பற்றியதல்ல. ஆனால் ஒவ்வொரு தருணத்தையும் இன்பமாக அனுபவிப்பதற்கான ரகசியம் “இப்பொழுது எனும் இத்தருணத்தில்தான்” புதைந்துக்கிடக்கிறது எனக் கூறுகிறார்.

“இத்தருணம் என்பதில்தான் ஏகாந்தமான ஓர் உணர்வு அடங்கியிருக்கிறது. அங்கு ஆனந்தம் இருக்கிறது. ஏதோவொரு காரணத்தினால் வருகின்ற ஆனந்தமல்ல. ஆனால் ஏற்கனவே அங்கு குடிகொண்டிருக்கும் ஆனந்தம். ஏனென்றால் அதுதான் நம்முடைய இயல்பான தன்மை. ஈடில்லா ஓர் ஆனந்தம் நம்முள்ளே கண்டுணரப்படுவதற்காக காத்திருக்கிறது. நம் வாழ்வில் இருக்கின்ற அறியதோர் சாத்தியம் இதுதான்,” என்கிறார்.

கடந்த பல வருடங்களாக மகராஜி உலக முழுவதும் பிரயாணம் செய்து மக்களுக்கு தங்கள் உள்ளே ஆனந்தத்தை அடைவதற்கான சாத்தியம் இருப்பதை கண்டுணரக்கூடிய ஒரு வாய்ப்பை வழங்கி வருகிறார்.

நீங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் நாளைய பொழுதுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், உண்மையிலேயே அதுதான் நிச்சயமில்லாதது. உங்களுக்கு நிச்சயமாக இருப்பது இத்தருணம் மட்டுமே. இத்தருணத்தின் சீரான தன்மையினால்தான் நீங்கள் வாழ்கிறீர்கள். இதுதான் உண்மை. இத்தருணம்தான் பரிபூரணமானது. இத்தருணத்தில் அனுபவத்திற்கு இடமுண்டு, எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் அல்ல. அங்கு எண்ணங்கள் வருவதில்லை, அங்கு துன்பங்கள் வருவதில்லை, அங்கு மனக்குழப்பமும் இருப்பதில்லை.

நிகழ்காலம் அல்லது இப்பொழுது என்றழைக்கப்படும் இத்தருணத்தில்தான் நாம் உண்மையாகவே வாழ்கிறோம். வெரும் எண்ணமாகவோ, நினைவாகவோ கற்பனையாகவோ அல்ல. ஆனால், உயிரோட்டமாக இருக்கிறோம். பெரும்பாலும் நம்முடைய எண்ணங்களினாலோ அல்லது ஆசைகளினாலோ இத்தருணத்திலிருந்து நாம் இழுத்து செல்லப்படுகிறோம்.

“இறந்த காலத்தின் கைதியாக இருப்பது எவ்வளவு சுலபம், எல்லோருமே கடந்துபோன நாட்களை நினைத்துக் கொண்டிருக்கிறோம். கடந்துபோன அந்த மாதங்களையும் வருடங்களையும் எண்ணிப் பார்க்கிறோம். அதோடு நழுவவிட்ட வாய்ப்புகளையும், திட்டமிட்டபடி செய்து முடிக்காமல் போன காரியங்களையும் நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அல்லது நம் எண்ணங்களை வருங்காலத்திற்கு சிறகடிக்க விடுகிறோம். நாளைய பொழுது சிறப்பாக இருக்கும், நாளை ஒருகால் நம்முடைய எதிர்பார்ப்புகளும் எண்ணங்களும் நிறைவேறலாம் என எதிர்காலத்திற்கும் கடந்தகாலத்திற்குமாக மனதை அலைபாய விடுவதில் நிகழ்காலத்தை முற்றிலும் மறந்து போய்விடுகிறோம்,” என்று கூறுகிறார்.

ஒவ்வொரு நாளும் ஆனந்தத்தை அனுபவிப்பது அவசியம் என்பதுதான் உலகெங்கும் உரையாற்றி வரும் மகராஜி வழங்கும் செய்தியின் கருப்பொருளாகும். தொடர்ந்து நிலைமாறி வரும் இவ்வுலகில் நிலையாக இருப்பது அந்தவொரு பொருள்தான், உள்ளே இருக்கும் ஆனந்தத்தைத் தவிர மற்றவையெல்லாம் மாறக்கூடியவை. அவை மாறும், அதுதான் அதன் இயல்பு. ஆனால் நாமோ அவை மாறாமல் அப்படியே இருப்பதற்கு எண்ணற்ற முயற்சிகளை எடுக்கிறோம். அதில் எந்த பலனுமில்லை.

இயற்கைக்கு புறம்பாக நாம் எதையும் செய்ய முடியாது. திருப்தியாக இருக்கவேண்டும், சந்தோஷமாக இருக்கவேண்டும் நிறைவாக இருக்கவேண்டும் என்ற ஏக்கம் மட்டும்தான் இந்த வாழ்வில் மாறாமல் இருக்கும் ஒரே விஷயம். நம்மால் இதை ஏற்றுகொள்ள முடிந்தால் நம்முள்ளே இருக்கும் அந்த உந்துசக்தியை புரிந்துகொள்ள முடிந்தால், நடக்கின்ற விஷயங்களுக்கப்பால் அற்புதமான ஒன்றை நம்முள்ளே கண்டுகொள்வோம்.

மகராஜி குறிப்பிடும் இந்த ஆனந்தம் ஏற்கனவே நம்முள்ளேயே இருக்கிறது. இது புதிதான ஒன்றல்ல. ஆனால் இந்த ஆனந்தத்தைப் பற்றி நாம் அறியாமல் இருந்துவிட்டோம்.

ஆனந்தமும் அமைதியும் இத்தருணத்திலும் உங்கள் உள்ளேதான் இருக்கிறது. ஆனந்தத்தின் ஊற்றும் நம்பிக்கையின் ஊற்றும் உங்கள் உள்ளேதான் இருந்து வருகிறது. அதை நீங்கள் இன்னும் அறியாமல் இருக்கிறீர்கள், அவ்வளவுதான்.

தரை இறக்கல்: PDF

மகராஜியைப் பற்றிய ஓர் அறிமுகம்

“ நாம் எதை தேடுகின்றோமோ அந்தவொன்று நம்முள்ளேயே இருக்கிறது. நாம் அதை சந்தோஷம் என்று அழைக்கலாம், அமைதி என்று அழைக்கலாம், அல்லது உண்மையான அன்பு என்றும் அழைக்கலாம்.”

நாம் அனைவருமே நம் சொந்த வழியில் உள்ளத்தில் நிறைவை தேடுகின்றோம். ஆயினும், நிறைவை தேடுவது என்பது எல்லோருக்கும் பொதுவானதே. நிறைவடைய வேண்டும், திருப்தியடைய வேண்டும் என்ற தேவை, நம் அனைவருக்கும் இயல்பாகவே உள்ளது. ஆனால், எவ்வாறு நாம் இதனை அடைவது? உண்மையிலேயே நாம் நிறைவை அடைகின்றோமா, அல்லது சூழ்நிலைகள் நமக்கு சாதகமாக அமையும் போது மட்டும்தான் நாம் சந்தோஷமாக இருக்கின்றோமா?

மகராஜி தனது பணியை இந்தியாவில் தொடங்கினார். வாழ்க்கையில் நிறைவாக இருக்கவேண்டும் என்பது இந்தப் பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உள்ள அடிப்படையான விருப்பமாகும். இந்த விருப்பதை நிஜமாக்குவதற்கு ஒரு விசேஷமான வழியை அவர் வழங்குகின்றார். அதனை ஞானவழிமுறை என்று அழைக்கின்றார். ஆர்வமுள்ளவர்களுக்கு உள்ளிருக்கும் அமைதியோடு தொடர்புகொள்ள அவர் வழங்கும் ஞானவழிமுறையின் நான்கு பயிற்சி முறைகள் உதவுகின்றன. உண்மையான ஆர்வமும் பயிற்சி செய்வதற்கான பிடிமானமும் கொண்டவர்கள் யாராக இருப்பினும் இந்த உன்னதமான உணர்வை அனுபவிக்க முடியும் என்று கூறுகின்றார்.

மகராஜி இச்செய்தியை வழங்கும் முதல் நபரல்ல. அவருக்கு முன்பே அவரின் தந்தை உட்பட பலரும் இதை செய்திருக்கிறார்கள். ராஜ பரம்பரையில் பிறந்த இவருடைய தந்தையான ஸ்ரீ ஹான்ஸ் ஜி மகராஜ் அவர்கள் இந்தியா முழுவதும் இச்செய்தியை வழங்கி வந்தார். தற்போது 88 நாடுகளில் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மனநிறைவையும் சந்தோஷத்தையும் அடைவதற்கு மகராஜியின் உரையை செவிமடுத்து வருகிறார்கள். அவரின் இந்த செய்தி 60 மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது.

மகராஜி இந்தியாவில் உள்ள ஹரிட்துவார் எனும் நகரில் 1957-ல் பிறந்தார். அவருக்கு மூன்று வயதாக இருந்தபோதே தன் தந்தையார் உரையை செவிமடுக்க வந்திருந்த பெரும் கூட்டத்தில் உரையாற்றத் தொடங்கினார். அவரது தந்தையாரின் மறைவுக்குப் பிறகு, எட்டு வயது நிரம்பிய மகராஜி இச்செய்தியை தொடர்ந்து வழங்கி வருகிறார்.

தனது இளம் வயதிலிருந்தே இந்தியாவில் பெரிய கூட்டங்களில் தொடர்ந்து உரையாற்றி வந்தார். தமது 13-வது வயதில் லன்டனிலும் லோஸ் எஞ்லஸ்சிலும் உரையாற்ற அழைக்கப்பட்டார். டெல்லியில் மூன்று லட்சம் மக்களாக இருந்தாலும், கோலாலம்பூரில் இரண்டாயிரம் மக்களாக இருந்தாலும், அல்லது பேங்கோக்கில் ஐ.நா மண்டபத்தில் இருநூறு பேராக இருந்தாலும் அவர் உலகில் வாழும் எல்லா தரப்பிலும் உள்ள மக்களின் நாடு, இனம், மதம் மற்றும் கலாச்சார பேதம் பாராமல் உரையாற்றி வருகின்றார்.

மிகவும் உன்னதமான ஒன்றைப் பற்றி எளிமையாக உரையாற்றுவதற்கு அவரிடம் ஒரு விசேஷத்தன்மை இருக்கிறது. பலதரப்பட்ட மக்களின் உள்ளத்தை தொடவும் அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அவருடைய செய்தியை எளிமையாக வைத்திருப்பதும் அவரின் ஆற்றலாகும்.

“நான் மக்களிடம் வெறும் வார்த்தைகளை மட்டும் கூறவில்லை. ஆனால் அகத்தினுள்ளே கவனத்தை திருப்பி அங்கிருக்கும் அழகை அனுபவிக்க ஒரு வழியையும் கற்றுகொடுக்கின்றேன். நான் அந்த அழகை உருவாக்கவில்லை. இது வெரும் கற்பனையல்ல, எண்ணங்களினாலும் வருவதல்ல. இது உங்கள் உள்ளேயே இருக்கிறது. உள்ளிருக்கும் அந்த உணர்வோடு தொடர்பை ஏற்படுத்தும் ஒரு செயல்முறையான வழி இல்லாவிட்டால், என் வார்த்தைகள் அர்த்தமற்றதாகிவிடும்,” என்று மகராஜி கூறுகின்றார்.

அவரின் செய்தியால் கவரப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தாலும், சிரமம் பாராமல் அவர் தொடர்ந்து மேலும் பல இடங்களுக்குச் சென்று உரையாற்றி வருகின்றார். பலவிதமான பதிப்பீடுகள், இணையதளங்கள், சீடிக்கள், வீசிடிக்கள், டிவீடிக்கள், அனைத்துலக நிகழ்ச்சிகள் மற்றும் துணைக்கோள நிகழ்ச்சிகள் வாயிலாக மக்கள் அவருடைய செய்தியை அறிந்துகொள்கிறார்கள்.

தரை இறக்கல்: PDF

13.5.07

மேலும் கண்டறிதல்

இது மேலும் கண்டறிதல் என்ற வீடியோவிலிருந்து எடுக்கப்பட்ட 10 நிமிடங்கள் நீடிக்கும் தொகுப்பாகும்.

மகராஜி அவர்களின் செய்தி

இது ஒரு வீடியோவிலிருந்து எடுக்கப்பட்ட 10 நிமிடங்கள் நீடிக்கும் தொகுப்பாகும்.